Sunday, November 27, 2011

உயிர்களுக்காய் ஊளையிடுங்களேன்! (பதிவு - ஆகத்து 2011)




(கேட்பது உயிர்ப்பிச்சையல்ல… நீதி!)

மரண தண்டனையை ஒழிப்போம்
மனித நேயம் காப்போம்…
மணித்தமிழ்நாட்டில் வீதிகள் தோறும்
மரணத்தின் ஓலமே சரணமாக….
அகிலம் முழுதும் 140 நாடுகளில்
அறவே இல்லை மரண தண்டனை
அறம் போற்றும் கருணை மண்ணில்
அநியாயமாய் மூவுயிர் முறிப்பா?
எய்தவன் இருக்க அம்பை
முறித்தல் நல்லறமன்றே…
அம்பாய் கூட இருந்திடாத
அன்பு நெறியில் வாழ்ந்திட்ட
யாதும் அறியா தமிழர் மூவரை
தூக்கு கழுவில் பழி தீர்க்கலாமா…
தீங்கு இழைக்கும் களைகளிருப்பின்
களையெடுக்க பயிரையும்  மாய்ப்பதா?
சாந்தன், முருகன், பேரறிவாளன்
இருபது ஆண்டுகளாய் தனிச்சிறைவாசம்
தூக்கு தண்டனை இன்னும் கூடுதல் வட்டியா??
குற்றம் செய்யா நிரபராதி மூவர்
உயிரைப் பறித்தல் உயர்நீதி ஆகுமா?!

புத்தன், இயேசு, காந்தி, நபிகள் காட்டிய
நேயம், கருணை, அகிம்சை எங்கே?…
ஈ, எறும்புக்கும் இன்னல் செய்யா
புனித பூமியின் மாண்பு எங்கே?…
மனிதருள் மாணிக்கம் மலர்ந்த பூமி
மனிதரை மாய்க்கும் மயானக்காடா?….
ஒரு சிலர் செய்த குற்றத்திற்காக
ஓர் இனத்தையே அழிக்க துடிக்கலாமா..
ஏழு கோடி பேரிருந்தும்
எட்டிப்பிடிக்கும் தூரமிருந்தும்
எம்மின அழிப்பை தடுக்க முடியவில்லை…
ஈழ வீடுகள் இழவுக் காடுகளாயின
இன உணர்வு இருந்தோரிடம் 
அதிகாரமில்லை… ஆள்பலம் இல்லை….
அனைத்துமிருந்தோரிடம் வாய்மையில்லை
தம்வாயில் செழித்திருக்க
இனக்கொலைக்கு வாய்க்கரிசி இட்டார்… 

இந்திய உள்ளரண் அமைச்சர் ப.சி (ப. சிதம்பரம்)
தமிழனாய் இருந்தும் நம்தவிப்பை தணிக்கவில்லை
கோரிக்கை வைத்த போதெல்லாம்
சிங்கள வாளுக்கு உறையாய் இருந்து
இறையாண்மை என்றே சாக்குரைத்தனர்…
தம்தலைவி பழிப்பசி எண்ணிய மட்டிலும் ஈடேற
எண்ணிலடங்கா அப்பாவித் தமிழரை
புத்த பூமியின் கொலைப்பசிக்கு
யுத்தப் போர்வையில் விருந்தாக்கியது காங்கிரசு…

இன்னொரு முனையில் தாய்த்தமிழக மீனவர்மீது
சிங்களப்படையின் கோரத்தாக்குதல் நின்றபாடில்லை
எல்லை மீறிய மீனவன் பேராசை
அவன் படும் தொல்லைக்கு பெரும்காரணமாம்…
கைகழுவினால் எஞ்சி சொட்டுகின்ற
நீர்க் குமிழளவு சிங்களத்தை
இந்தியச் சிங்கத்தால் கண்டிக்க துப்பில்லை…
எங்கள் வீட்டு கொல்லைப்புறம் கட்சத்தீவை
ஆய்ந்தறியாமல் இலங்கைக்கு தாரைவார்த்துவிட்டு
வெறும் வார்த்தைகளால் சப்பைக்கட்டு ஒரு வெட்கக்கேடு
தலைவர் ராஜீவை குண்டு தின்றதே…எனும் தியாகிகளே 
சேனையோடு கைக்கோர்த்து வருவோர் கூண்டோடு எங்கு போனீர்
காரணம் ஏதாயினும் மரணிக்கச் செய்வது அதர்மம்தான்…
கொலையின் மர்மங்கள் விலகாதபோது…மெனக்கெட்டு 
குற்றமற்றவர்களை தூக்கிலிடுவதும் அதர்மம் தானே?

இரத்தக்கறை கைகளுக்கு தியாகத்தின் அர்த்தம் தெரியுமா..
இன இரத்தம் ஈழத்தில் ஓடுகிறது என்றவுடன்
தம் இரத்த ஓட்டத்தை நிறுத்திகொண்ட ஈகையர்
முத்துக்குமரன் உள்ளிட்ட வீரத்தமிழர் பலபேர்… எங்கள்
வீரத்தின் விளைநில வரலாறு பெரிது துரோகிகளே!
விதைத்தது போதும் சொந்தங்களே! - கெஞ்சுகிறோம்.. இருந்தும்
இன்று மூன்று பேரின் உயிரைக்காக்க… தன்னுயிரையே 
ஈந்து நிற்கிறாள் செந்தமிழ்க் குலமகள் செங்கொடி…
உம் கொடுங்கோல் செங்கோலும் செங்கோட்டையும்
எம்மவர் உயிர்த்தாங்கலை என் செய்ய முடியும்?… 

காங்கிரசு அரசே! மத்திய அரசே!
எதுவரை உங்கள் ஆதிக்கம், அடக்குமுறை… 
இனமும் மொழியும் வேறாய் இருந்தும்
வேற்றுமையில் ஒற்றுமை காக்கிறோம்…
தன்மகனுயிர் காக்க இதயம் இல்லையேல்
இந்தியத்தாய்க்கு இறையாண்மை எதற்கு…
தமிழனைக் காக்க தமிழாண்மை தீர்வாயின்
இந்திய வேரைத்தாங்கும் கிளையாய் எதற்கு..
மேன்மையற்ற உங்களிடம் அடிமைகளாய் இருக்க
தமிழன் என்ன ஆண்மை அற்றா கிடக்கிறான்??

அந்தோ அன்பர்களே! மானுட மனிதமே!
நாங்கள் இவர்களுக்காய் நீதி - நியாயம் கேட்பது..
பிரித்தாளும் சூழ்ச்சியால் ஒன்றுபடாமல்
இருக்கும் தமிழர்கள் என்பதால் அல்ல..
இரக்கமில்லா கொடுங்கோல் இந்தியாவின்
இளம்பிள்ளைகள் என்பதற்காக அல்ல…
எந்த இனமாயினும் மதமாயினும் மனிதனை அழிக்கும் மரண தண்டணை கொடியது…
மனிதனை மனிதன் மாய்ப்பது கொலையாயின்
அரசின் தண்டனை மாய்ப்பதும் கொலைதானே?!
அன்னை கொடுத்த ஆருயிர் பறிக்க
உரிமையில்லை யாருக்கும்..எந்த அரசுக்கும்...
கொலைக்கு தண்டனை கொலைதான் என்றால்
மனித குலத்தில் ஒருவரும் மிஞ்சார் என்பதற்காக…

ஊழலுக்கெதிராய் உரிமைக்குரல்
கொடுக்கும் தேசப்பற்றாளர்களே!
இங்கே நல்லவர் மூவுயிர் காக்கவும்        
கொஞ்சம் நேசக்குரல் கொடுங்களேன்!…
நாயகன் உடல்நிலை நலமில்லை என்றதும்
ஆயிரமாய் சேர்ந்து தலைமயிர் தந்தீரே!
இங்கே வல்லான் சதியில் உயிரேபோகுது
தடுத்து நிறுத்த தலையாவது காட்டுங்களேன்!…
தலைவன் சொன்னதும் தீக்குளிக்கவும்
தயங்காத படைபலத் தொண்டர்களே
நாளை உம்மையும் காக்கலாம் யார் கண்டது
தூக்கை ஒழிக்க திரண்டு வாருங்களேன்…
பொதுக்கூட்டம் ஆயினும் இலட்சத்தில் கூட்டி
தமிழினத்திற்காய் வாழும் தனிக்கட்சி தலைவர்களே!
தூக்குமேடையை தகர்த்தெறியும் இலட்சியத்திற்காக
தகத்தகாய தொண்டர்களை வேலூர்சிறை சூழ
எல்லோரும் ஒரேசமயம் பொதுவாய் கூட்டுங்களேன்… 
அனைத்திற்கும் அப்பால் நல்லாட்சி வேண்டி
மாற்றம் தந்திட்ட மக்கள் நம்பிக்கையின்பால் 
மாறாப்பற்றுக்கொண்ட மக்கள் தலைவி
தமிழக முதல்வரே… கருணை அம்மா!
ஈழக்கொலைக்கு எதிராய் தீர்மானம் போட்டதற்கே
ஈரல் குளிர்ந்து போற்றினர் தமிழர் உம்மை…
இன்று உங்கள் விரலசைவில் மூவுயிர் மீண்டால்
உயிருள்ளவரை மறக்காதம்மா மறத்தமிழினம்
தயவு கூர்ந்து மூவுயிர் காக்க ஆவண செய்வீர்…

எம்மவர் உயிர்க்கு கேடு நேர்ந்துவிட்டதே…
எதற்காகவும் அஞ்சாத தமிழர் நெஞ்சம்
கை மீறி போய்விடுமோ என்ற அச்சத்தில்
எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டி
அப்பாவி உயிர்களுக்காய் ஊளையிடுகிறோம்…
அடப்பாவிகளே!... என்று சொல்லும்படி
அரசியல் சதுரங்கம் விளையாடி விடாதீர்…
ஆனால் ஒன்று!.. எம்மவர் உயிர்க்கு
எதிராய் நிற்கும் எந்த சக்தியும்
சகதியாய் போவது நிச்சயம்!… எம்மக்கள்
வயிற்றெரிச்சல் சும்மாவிடாது வஞ்சகர்களே
மறந்துவிடாதீர்கள் மறுபடியும் தேர்தல் வரும்… 

கதிரவன் அசரலாம் கழுவைச் சுட்டெரிக்க…
இலைகள் மௌனிக்கலாம் தூக்கடியை சூழாமல்…
நாங்கள் ஒருபோதும் ஓயமாட்டோம்
இறுதி மூச்சு உள்ளவரை இடம் பெயரமாட்டோம்…
முடிந்தால் பார்த்துக்கொள் என்று
தூக்குக் கொட்டகையின் வாயில்களை
எங்கள் இதயக் கதவுகளால் மூடிநிற்போம்…
மரணச் சாவடியின் பாதை மறித்து
மனித சுவர்களாய் எழுந்து நிற்போம் …
ஈரம் உள்ள தமிழரே… வீறுகொண்டு வாரீர் !
நம்மினம் காப்பது நம் முதல் கடமை
மனிதம் காப்பது அதனினும் முதன்மை…
அறிவால் எழுந்த அறநெறித் தமிழர்
உணர்வால் எழுந்தால் என்னவாகும் என்பதை
மீண்டும் ஒருமுறை உலகுக்கு காட்டிடுவோம்!…

குற்றம் செய்தவன் கேட்கலாம் உயிர்ப்பிச்சை
நாம் உரிமையாய் கேட்பது நீதியை.. விடுதலையை!
குற்றம் செய்யா நிரபராதிகள்…உத்தமர் மூவரை
உடனே செய்க விடுதலை! விடுதலை!!

இவண்
மரண தண்டனைக்கெதிரான
மனித நேயன்

No comments:

Post a Comment